NSE-ல் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள்… 4 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்- அடுத்த 3 நகரங்கள்
சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வை மணி அடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், தேசிய பங்குச் சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் கடனுக்கான வட்டி செலுத்துவது குறையும். இன்றியமையாத உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டப்படும். சென்னை மாநகராட்சியின் பொருளாதார நிலை மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்களை சப்ஸ்கிரைப் செய்வதில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். 4.21 மடங்கு அளவிற்கு அதிகமாக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 421 கோடி ரூபாய் என்று சொல்லலாம்.
இந்த நிதிப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு ஆண்டு வட்டியாக 7.97 சதவீதம் கிடைக்கும். இது வங்கிகளில் ஃபிக்சிட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் ரிஷப் ஐஏஎஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இது முதல்முறை அரங்கேறியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்
இதுபோன்ற நிதிப் பத்திரங்களை எதிர்காலத்திலும் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பத்திரங்களை 4 மடங்கிற்கும் மேல் சப்ஸ்கிரைப் செய்திருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. அடுத்தகட்டமாக கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளும் தேசிய பங்குச் சந்தையில் நிதிப் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் நிதிப் பத்திரங்கள் வெளியிடவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
