பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்
பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.
மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
Read More