மாதம் ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்…
பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். தகுதி என்ன என்பதை பார்க்கலாம்.
பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆதரவற்ற குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர, மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், கல்லூரிக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
யார் யார் தகுதியானவர்கள் : பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழல். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் சிறையில் இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலை.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை நகல். குழந்தையின் ஆதார் அட்டை நகல். பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுக்கான கல்விச் சான்றிதழ்கள். குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்.
இந்த ஆவணங்களுடன், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.
