ராஜ்ய சபா எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்..ம.நீ.ம துணைத் தலைவர் தங்கவேல்
மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியுடன் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. திமுக சார்பில் எம்.பி. ஆக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் சார்பில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக கூட்டணி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் உறுதியாக எம்.பி.யாக முடியும். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை நாங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ராஜ்ய சபா எம்பியாக நிறுத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம். தலைவர் தான் நிற்க வேண்டும் என ஆசைப்பட்டு அவரிடம் கூறி உள்ளோம். அவரும் சரி என கூறியிருக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
20, 21 தேதிகளில் வந்துவிடுவார், வந்ததும் முடிவு செய்துவிடுவோம். திமுக உடன் தான் கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சியில் இருந்து தலைவர்கள் சிலர்தான் சென்றுள்ளார்கள். ஆனால் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
