metroac

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை..! ஏ.சி. ரயில் சேவை தொடக்கம்

இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் புறநகர் ரயில் சேவையாக சென்னை புறநகர் ரயில் சேவை இருக்கிறது. சுமார் 25 லட்சம் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் புறநகர் ரயில் வழித்தடம் 1200 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்கள் உட்பட ஆந்திர பிரதேசம் வரை விரிவடைந்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் ரயில் சேவைகள் இயக்கப்படும் நிலையில், குளிர்சாதன ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை குளிர்சாதன ரயில் சேவை புறநகர் ரயில் வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள், மெட்ரோ ரயிலில் இருப்பது போன்று ரயில் நிலையங்களுக்கான தகவல் அமைப்பு, சிறப்பான உட்கட்டமைப்பு போன்ற வசதிகள் உள்ளது.

முதல் கட்டமாக இரண்டு குளிர்சாதன ரயில்கள் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரையிலும் 6 சேவைகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் குளிர்சாதன ரயில் காலை 8:35க்கு செங்கல்பட்டு சென்றடையும். அதே ரயில் காலை 9 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு 10:35க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

மாலை 3:45க்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5:25க்கு செங்கல்பட்டு சென்றடையும். அதே ரயில் மாலை 5:45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு இரவு 7:15க்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7:35க்கு புறப்படும் ரயில் தாம்பரத்திற்கு இரவு 8:30க்கு சென்றடையும். அதேபோன்று அதிகாலையில் தாம்பரத்திலிருந்து 5:45 புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 6:45க்கு வந்தடையும்.
ஞாயிற்றுக்கிழமை குளிர்சாதன ரயில் இயக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் ரயில் நின்று செல்லும் என அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச பயண கட்டணமாக 35 ரூபாயும் அதிகபட்சமாக 105 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More