maduraimeeting

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” – மதுரையில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். நேற்று மதுரை வந்த அமித்ஷா, இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசிய அவர், “மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” எனத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: “மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது தமிழ். ஆனால், தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது.
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொன்னது சரிதான். என் நீண்ட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். திமுகவை அமித்ஷாவுக்குப் பதில் மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் எனது சிந்தனை தமிழ்நாட்டைப் பற்றியே இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்க முந்தைய அரசுகள் முயலவில்லை. ஆனால் மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளைத் துல்லியமாக அழித்துள்ளோம். மோடி ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலையை அடைந்துள்ளோம். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் வீடு புகுந்து அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சிக் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கொடுத்தது. மோடி அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Read More