“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”
மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.
