கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்-ரயில் நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பணிகள் தீவிரம்!
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது திறக்கப்பட்டு ஒரு ஆண்டையும் தாண்டி உள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வந்தனர். அடிப்படை வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.
கிளாம்பாக்கம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஸ்கைவாக் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பனிகள் நடைபெறும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாம்பரம் பகுதிக்கு செல்ல பேருந்து வசதி மற்றும் தனியார் வாகனங்கள் வசதி மட்டுமே இருந்து வந்தது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதேபோல் மெட்ரோ ரயிலும் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் விரைவில் அதற்கான பணிகளும் தொடங்க உள்ளது.
இதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஸ்கைவாக் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏனெனில் மக்கள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஆபத்தான சாலையை கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் ஸ்கைவாக் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு எளிதில் செல்லலாம். இந்த ஆகாய நடைமேடையானது சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதில் செல்லலாம். இந்த பணிகள் நடைபெறும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதேபோல் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும். இது திறக்கப்பட்டால் தாம்பரத்தில் இருந்து வரும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருபுறமும் ஏறி, இறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைமேடையும் திறக்கப்பட்டால் மேலும் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் பேருந்து நிலையத்தில் இறங்கி ரயில் நிலையத்தை பயன்படுத்தி தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
