indians

இந்தியா

இந்தியர்களுக்கு வந்த ஆபத்து.. மொத்தம் 18000 பேர்.. வாடகை விமானங்கள் மூலம் நாடு கடத்த தயாரான டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் , அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றவுடன், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதற்குத் தயாராகும் வகையில், அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சுமார் 15 லட்சம் பேரின் பட்டியலை தயாரித்துள்ளது.
அவர்களில் சுமார் 18,000 இந்திய குடிமக்கள் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நாடு கடத்தப்படும் இறுதி பட்டியலில் 15 லட்சம் பேரில் 17,940 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகையாக அமெரிக்காவில் சுமார் 725,000 இந்தியர்கள் குடியேறியுள்ளனர். அக்டோபரில், இந்தத் தரவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
அக்டோபர் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட விமானம், இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வாடகை விமானம் மூலம் வரும் ஜனவரி மாதம் முதல் நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஆவணமற்ற இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை சட்டப்பூர்வமாக்க போராடி வருகின்றனர். கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 90,000 இந்தியர்கள் அமெரிக்க எல்லைகளை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More