incident

அரசியல்சினிமாதமிழ்நாடு

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Read More