ஏஐ மூலம் சரியாகும் நெடுஞ்சாலைகள்… 8,400 கி.மீ தமிழக ரூட்- NHAI டெக் பிளான்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சாலைகளை பராமரிக்க தொழில்நுட்பத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு
ஏஐ மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டம்
பழுதுகளை சரிசெய்து சீரான பயணத்திற்கு ஏற்பாடு
செயற்கை நுண்ணறிவு உட்புகாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் ஏ.ஐ பேச்சு தான். இந்நிலையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவின் உதவியை நாட முடிவு செய்துள்ளனர். இதற்காக NHAI எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு சேவை களமிறக்கப்படவுள்ளது.
இதன்மூலம் எங்கெல்லாம் சாலைகளில் பள்ளங்கள் இருக்கின்றன, அறிவிப்பு பலகைகள் சேதமடைந்து உள்ளன, தெரு விளக்குகள் எரியவில்லை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, முறைகேடான வகையில் தடுப்புகள் அமைத்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சாலைகளில் விரிசல், தேய்மானம், வெள்ளை நிற குறியீடுகள் அழிப்பு, எல்லையோர கோடுகள், சட்டவிரோத பார்க்கிங், தடுப்புகளை அகற்றி வாகனங்களை இயக்குவது, அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்க முடியும்.
இதுதொடர்பான வீடியோ வடிவிலான ஆதாரங்களை நெடுஞ்சாலை துறைக்கு கிடைக்கும். அதைக் கொண்டு விரைவாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஐந்து மண்டலங்களாக பிரித்து நெடுஞ்சாலை தொழில்நுட்ப வசதிகளை அளிக்கவுள்ளனர். அதில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் அடங்கும். 2024 நிலவரப்படி இந்தியாவில் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.இதில் முதல்கட்டமாக 38,102 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு வசதிகள் பொருத்தப்படவுள்ளன. இதேபோல் தமிழகத்தில் 8,400 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்படவுள்ளன. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே டேஷ்கேம் அனலிடிக்ஸ் சர்வீஸ் (DAS) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இவர்கள் ஏஐ அடிப்படையிலான வீடியோ கண்காணிப்பு கட்டமைப்பு வசதிகளை வழங்கவுள்ளனர். நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே ஏஐ தொழில்நுட்ப வசதிகள் மூலம் சாலை வசதிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
