காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.. காரணம் என்ன?
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணைகளை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் கைதான வடிவேல் என்பவர் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக ஆணையிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி சரண் ஆஜரானார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் ஒரே காவல் சரக எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்க முடியாது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். திட்டம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது துணை ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
