flight

இந்தியாஉலகம்தமிழ்நாடு

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் ரத்து – ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், இரண்டாவது வாரமாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வான்வழியாக ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு, தலைநகர் தோஹாவில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வெற்றி அறிவிப்பு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலால் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது. கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. இதேபோல, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்தும் ஒரு ஏவுகணையை ஈரான் ஏவியது.
இதனிடையே மறுஉத்தரவு வரும் வரை, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட விமானங்கள், புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி விடப்பட்டதாகவும், மற்ற விமானங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாய் வான்பகுதி மூடப்பட்டதால், அதற்கு ஏற்பட்ட விமான சேவையில் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், திபிலிசி பகுதியிலிருந்து புறப்படும் மற்றும் செல்லும் விமானங்களில் பாதிப்பு ஏற்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, கத்தார் ஏர்வேஸ் நிறுவன சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

Read More