தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More