பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி …
என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை அடுத்த மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தற்போது பாஜக, என்.டி.ஏ. அரசை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுக்காலத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுகவுக்கு இரண்டு முறை மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் பாஜக, என்.டி.ஏ.வின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜனநாயகம், நம்பகத்தன்மை உள்ளிட்டவை இல்லாத அரசுதான் இருக்கிறது. அரசு இங்கு ஒரே குடும்பத்திற்காக இயங்கிவருகிறது.
வம்சாவழி, ஊழல், பெண்களை வசைபாடுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது உள்ளிட்ட நான்கு வழிகள்தான் திமுகவில் இருப்பவர்கள் வளர்ச்சி பெற இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் சுமக்க வேண்டியதாக இருக்கிறது.
நாட்டின் பண்பாட்டை வளம் நிறைத்ததாக மாற்றியது தமிழ்நாடு. வளர்ச்சி அடைந்த பாரதம் என நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு வளரும் வேகத்தில் பாரதம் வளரும்.
கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செய்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப்பகிர்வு வாரியாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாடுக்கு வழங்கியிருக்கிறது.
திமுக – காங்கிரஸ் அரசு இரயில்வே பட்ஜெட்டில் அளித்த தொகையைவிட என்.டி.ஏ. அரசு 7 மடங்கு அதிக நிதியை வழங்கிவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் போன்ற ரயில்களை என்.டி.ஏ. அரசுதான் செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.
தமிழ், கலாச்சாரம், வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை எல்லாம் எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உலக தலைவர்களுக்கு திருக்குறள் நூலை பரிசாக வழங்கியிருக்கிறேன். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். காசியிலே பல பிள்ளைகள் தமிழில் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதியோடு பணியாற்றிவருகிறோம். சில நாட்களுக்கு முன்பு நமது முருகருக்கு விளக்கு போடுவதில் விவாதம் ஏற்படும்போது, நமது தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களுக்கு பாராட்டு. திமுக – காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. உங்களை அவமானப்படுத்தினர். என்.டி.ஏ. அரசு ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியாக ஆய்வு செய்து அங்கீகாரம் கொடுத்தது. தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசு இருக்க வேண்டும். அந்த அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசாக இருக்க வேண்டும்” என பேசினார்.
