சிலிண்டர் தட்டுப்பாடு – அரசு ஆலோசனை
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல், இந்திய எரிசக்தித் துறையில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதே போன்ற அச்சம் நிலவி வரும் சூழலில், பல முன்னணி உணவகங்களில் ஒரு நாளைக்குத் தேவையான எரிவாயு மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது. நிலைமை சீரடையாவிட்டால் வணிகத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மாநில அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இந்த நெருக்கடியான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் எரிபொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனையை முறைப்படுத்தவும், சமமான விநியோகத்தை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதுக்கல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுத்து, பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் எரிபொருள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கியுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், தடையற்ற சேவையை வழங்கத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More