crudeoil

இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி

மோடி – டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்த கருத்துக்கு இந்தியா பதிலடி
ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“எனக்குக் கிடைத்த தகவலின்படி, நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே எந்தவிதமான தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வியாழக்கிழமை அன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.

முன்னதாக, ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.

“இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் நிரந்தர முன்னுரிமையாக இருந்து வருகிறது. நம்முடைய இறக்குமதி கொள்கைகள் முழுவதுமாக இந்தக் குறிக்கோளையே வழிநடத்துகின்றன” என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
“நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதிசெய்வதே நம்முடைய எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இது, சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக நம்முடைய எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறியுள்ளது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத போர், ஆனால், ரஷ்யா முதல் வாரத்திலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும், இப்போது அவர்கள் நான்காவது ஆண்டிற்குள் செல்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

“எனவே, இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, அவர்கள் [பிரதமர் மோடி] இன்று ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளார். உடனடியாக இதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்குச் சற்று கால அவகாசம் தேவை, ஆனால், அந்தக் கால அவகாசம் விரைவில் முடிவடையும்” என்று அவர் கூறினார்.

“அது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம்” என்று கூறிய அவர், பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பது, “நாங்கள் கடந்த வாரம் மத்திய கிழக்கில் செய்ததை விட (போரை நிறுத்த) ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும்” என்றும் கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும், அவரால் ஏற்படுத்தப்பட்ட அமைதித் திட்டத்தின் கீழ் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் அமெரிக்க அதிபர் இங்கே குறிப்பிட்டார்.

“இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது [ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது] எளிதாகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர், போர் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்குச் செல்வார்கள்” என்று டிரம்ப் கூறினார்.

ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான இறக்குமதிகள் அதிபர் விளாடிமிர் புதினின் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கின்றன என்று அமெரிக்கா கருதுவதால், இது குறித்த கவலைகளை பிரதமர் மோடியிடம் எழுப்பியதாகவும் டிரம்ப் மேலும் கூறினார். “இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

மோடியுடனான உறவு குறித்து டிரம்ப்

பிரதமர் மோடியுடனான தனது உறவைப் பற்றி டிரம்ப் அன்புடன் பேசினார்.

“மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார்” என்று அவர் தன்னைப் பற்றி மூன்றாம் நபரில் குறிப்பிட்டார். “நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். இது ஒரு நம்ப முடியாத நாடு, மேலும், ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் இருப்பார். எனது நண்பர் (மோடி) இப்போது நீண்ட காலமாக அங்கு இருக்கிறார்.”

டிரம்ப் இவ்வாறு கூறியது, இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணெய் இறக்குமதிகள் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரியை விதித்த கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் தாமிர பொருட்களின் விலை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தக வரி குறித்து ஐக்கிய அரபு
அமீரக அதிபருடன், பிரதமர் மோடி பேசி இருக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சில முக்கிய வியூகங்களை வகுக்கும் வகையிலும் பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.

மக்களவையில் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே பலசுற்றுபேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 10-15 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை: வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்நிலை குழு ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி வருகிறது. அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்படும். அதன்பிறகு, இந்திய உயர்நிலை குழு வாஷிங்டன் செல்லும்.

இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும், அமெரிக்க தரப்பில் பிரென்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த ஜூலையில் தென்கொரிய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இதேபோல, இந்திய பொருட்கள் மீதான வரியையும் அமெரிக்க அரசு நிச்சயமாக குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More