குடியரசு துணைத் தலைவர்ஆனார்-சி.பி.ராதாகிருஷ்ணன்..
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 21ஆம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களத்தில் இருந்தார்.
இதனால் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியானது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து எம்.பி.க்களும் உரிமை உள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் ஓர் இடம் பதவி காலியாக உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர் பணியிடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 781 உறுப்பினர்கள் உள்ளனர். 7 எம்.பி.க்களை கொண்டுள்ள பிஜு ஜனதா தளம், 4 எம்.பி.க்களைக் கொண்டுள்ள பாரதிய ராஷ்ரிய சமீதி ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. 11 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், குடியர்சுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். மொத்தமாக 98.2 சதவிகித வாக்குகள் பதிவாகின. சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
