chennai rains

தமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்.. ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட 3 முக்கிய ஏரிகள்..

கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிய நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் நேற்று 14 செ.மீ மழை பதிவானது. இதன்காரணமாக ஏரிக்கு நேற்று காலை 743 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 21.50 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை கடந்துள்ளது.24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடியை நீர்மட்டம் கடந்ததை அடுத்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக முதல் கட்டமாக ஐந்து கண் மதகிலிருந்து இரண்டு மற்றும் நான்கு ஆகிய செட்டர்களில் இருந்து ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.உபரி நீர் திறப்பதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரி திறப்பு

இதற்கிடையே, சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தற்போது 12,760 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று 5000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டியில் மொத்த உயரம் 35 அடியில் 35 அடியும் நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை கூடுதல் நீரை திறந்துவிட்டுள்ளனர். இதேபோல், புழல் ஏரியில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.சென்னையை சுற்றி மூன்று பகுதிகளிலும் உள்ள மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் ஆறுகளில் நீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதே. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியுடன், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த 3 ஏரிகளிலும் நீர் திறக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனிக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Read More