இனி பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு அண்மை காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
