வங்கி லாக்கர் வைத்திருந்தால் உடனே இதனை செய்யவும்-வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. முக்கிய உத்தரவு…
அனைத்து வங்கிகளிலும், வாடிக்கையாளர்களுக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்கவற்றை பாதுகாக்க முடியும். இதற்கு வங்கிகள் தனியாக பராமரிப்பு கட்டணமும் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களை வங்கிகள் 24*7 என கண்காணித்து வருகின்றன. இதற்காக வங்கிகளில் தடை செய்யப்பட்ட பகுதி, கண்காணிப்பு கேமராக்கள், அலாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் லாக்கரை சீல் வைப்பதைத் தவிர்க்க உடனடியாக அதைச் செய்யுங்கள்.
ஆகஸ்ட் 2021 இல், தற்போதுள்ள அனைத்து லாக்கர் வைத்திருப்பவர்களுடனும் புதிய வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. மேலும், இதில் பல வாடிக்கையாளர்கள் கையெழுத்திடாததால் ஏற்கனவே இருமுறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதல்முறை டிசம்பர் 2023 வரையிலும், இரண்டாவதுமுறை மார்ச் 2024 வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க, மார்ச் 2024 முதல் டிசம்பர் 2025 வரை காலக்கெடுவை நீட்டிக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி லாக்கர் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்களின் லாக்கர் சீல் வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. எனவே வங்கியில் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனடியாக இதனை முடித்துவிடுவது நல்லது.
நீங்கள் ஏற்கனவே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் வங்கிக்குச் சென்று அதில் கையெழுத்திடுங்கள். அதில் கையெழுத்திட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாதவர்கள், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பதைச் சரிபார்க்க தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று தகவல்களை பெறலாம்.
