விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை-”யாருக்கு யார் எதிரி …
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தேர்தலில் முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்து என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பா சொன்னா பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லிவிட்டு நீங்கள் செய்யும் ஆட்சி என்ன?. அதற்கு கொஞ்சம் கூட குறையாத பாசிச ஆட்சித்தானே.
அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு இடையே தான் போட்டியே. அது தவெக மற்றும் திமுக இடையே தான்” எனத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை வெளியே வருவது ஒருவித அரசியல். இந்த அரசியலை மக்கள் பார்ப்பார்கள்.
விஜய் உட்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களத்தில் யாருக்கு யார் எதிரி என வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். திமுக தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், மக்கள் மன்றத்தில் சொல்வதிலும், திருத்துவதிலும், போராடுவதிலும், தீர்வு வழங்குவதிலும் பாஜக தான் முதன்மையான கட்சி.இன்று அரசியலில் இன்று சக்திவாய்ந்தவராக இருப்பவரை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும் அதனால் பிரதமரை விமர்சித்து பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.
Read More