andhra

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தொகுதி மறுவரையறை விவகாரம்.. கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்ற தமிழக அரசின் குழுக்கள்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்கும்படி கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களை திமுக பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா அடங்கிய குழு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து, தென் மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அப்போது, கர்நாடக முதலமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென்மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா ஸ்ரீநிவாச ராவை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இதன் பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார். இதேபோல, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Read More