amithsha

Uncategorizedஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் இ.பி.எஸ் சந்திப்பு…

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவை சந்திப்பதற்கு அவருடன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார். மேலும், இதற்கான பதிலுக்காக செங்கோட்டையன், 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறினார்.

செங்கோட்டையன் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.

ஆனால், செங்கோட்டையன் அவகாசம் அளித்து ஒரு நாள் கழித்து, அவர் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, புதிதாய் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (16.09.2025) டெல்லி சென்றார். முதலில், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி இரவு 8 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி, சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷாவை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமியுடன், அ.தி.மு.க மூத்த தலைவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி, “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களைச் சந்திக்க வேண்டாம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ வழக்குகள் உள்ள தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பு முடிந்ததும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் தனியாக கிளம்பி சென்றனர். அதற்கு பிறகு, 40 நிமிடம் சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக கிளம்பி சென்றார் என ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புதிய தலைமையுடன் பாஜக எதிர்நோக்கும் நிலையில் அமித் ஷாவின் தேர்தல் கணக்கு என்னவாக இருக்கும்?.
அடுத்த ஓராண்டில் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஒரு மாநிலத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி தேர்தல் வியூகம் வகுக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் இடையே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா சுமார் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளித்ததாகக் கூறினார். அதேநேரம் ஒரு ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அமித் ஷா அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
சென்னை வரும் அமித்ஷாவை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சென்று சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Read More