சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்…
சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. பிகார் போன்று தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அதிமுக, பாஜக, பாமகவின் அன்புமணி தரப்பு தவிர்த்து, கூட்டணியில் இல்லாத தேமுதிக, தமாக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அமையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இக்கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
