அதிமுக – பாஜக கூட்டணி-தமிழகத்தில் 4ஆவது முறையாக அமைந்தது
அதிமுக – பாஜக கூட்டணி, கண்டிப்பாக மீண்டும் அமையும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கணித்தது போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்தது நடந்துவிட்டது. இனி பாஜக – அதிமுக கட்சிகள் மனக்கசப்பை மறந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது போல, கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி, உறவு முறிந்து மீண்டும் இணைவது இது முதல் முறையல்ல.
1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் முதல் முறையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக 23, பாஜக, பாமக மற்றும் மதிமுக தலா 5 இடங்கள் மற்றும் ஜனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3, பாமக 4 இடங்களிலும் வென்றன. ஆனால், அடுத்த ஓராண்டிலேயே அதாவது 1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. அந்தத் தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், ஒட்டுமொத்தமாக 39 இடங்களையும் வாரிச் சுருட்டியது திமுக கூட்டணி.
இதனை அடுத்து, தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது, ஜெயேந்திரர் கைது என பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிய ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இது ஜெயலலிதாவின் மறைவு வரை நீடித்தது. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதாகக் கூறிய ஜெயலலிதா, இனி அப்படியொரு தவறைச் செய்ய மாட்டேன் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடியை கடுமையாக எதிர்த்து, “மோடியா? லேடியா?” எனும் முழக்கத்தையும் முன்வைத்தார் ஜெயலலிதா.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2019 தேர்தலில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது பாஜக. 2001 தேர்தலில் 4 இடங்களில் வென்ற பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2021ல் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.
இதையடுத்து, அதிமுகவின் கொள்கைத் தலைவரான அண்ணா, மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தெல்லாம் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது.
இதனை அடுத்து வந்த 2024 மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை. கூட்டணி முறிவால் வாக்கு சதவீதம் பிரிந்ததே காரணம் எனப் பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே, மீண்டும் பாஜகவுடன் கைகுலுக்கி அதன் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவுக்கு விருந்து வைத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
