ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுவதாகவும், அடுத்த 3 மாத உரிமைத் தொகையாக மூவாயிரம் ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு திமுக கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். இந்நிலையில் ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. அதன்படி மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கை துணை முதலமைச்சர் உதயநிதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்பட 7 பேரை தவிர்த்து மற்ற யாரும் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் உள்பட இரண்டாம் கட்ட அமைச்சர்கள், அரசின் முக்கியத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அறிந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வங்கிகளின் அலுவல் நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே மகளிரின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், அதற்காக 8 தேசிய வங்கிகளுக்கு முதல் நாளே அலர்ட் கொடுக்கப்பட்டு 750 பேட்ஜ்களாக பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. காலை 6 மணி முதல் 11 மணிக்குள் மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை மகளிருக்கு வாக்குறுதியாக அளித்தார்.
முதலமைச்சரின் அந்த வீடியோவும் யாரும் அறிந்திராத வண்ணம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொழில்முனைவோருக்கான திட்டங்களை அறிவித்து, மகளிரின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால், மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரத்து 500 ரூபாயை முன்கூட்டியே வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் அதற்கு முதல் நாளான இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதையும் கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பே பணத்தை வரவு வைத்து தனது அரசியல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.
Read More