தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்கள் கைது – உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்..
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது டெல்லி போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நாட்டிற்காக தாங்கள் வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நேற்று அறிவித்தனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

இந்த நிலையில், நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது.
