விளையாட்டு

மூன்றாவது முறையாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி

டெல்லியில் உள்ள பிரபல அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக கிரிக்கெட் அணிகள் நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடின.

இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அணி விரட்டியது. ஹரி நிஷாந்த் மற்றும் நாராயண் ஜகதீசன் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஹரி நிஷாந்த் அவுட்டானார். தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷன், 9 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கேப்டன் விஜய் ஷங்கர் 18 ரங்களிலும், நாராயண் ஜெகதீசன் 41 ரன்களிலும் ஆட்டத்தின் 16-வது ஓவரில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஷாருக்கான் மற்றும் சஞ்சய் யாதவ் அதிரடியில் 17-வது ஓவரில் 19 ரன்களை குவித்து தமிழ்நாடு அணி. கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது தமிழ்நாடு அணி .

இருப்பினும் ஷாருக்கான் அதிரடியில் தமிழ்நாடு த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் விளாசி கோப்பையை வென்றுக் கொடுத்தார் ஷாருக். 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார் அவர். 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் இதில் அடங்கும். இதன் மூலம் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி .

அடுத்தடுத்து இரண்டு முறை (2020 மற்றும் 2021) என இரண்டு சீசன்களிலும் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றுள்ளது தமிழ்நாடு அணி. ஆக மொத்தத்தில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் தமிழ்நாடு அணி அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.