அரசியல்தமிழ்நாடு

கடைகள் அடைத்தபிறகு மது பாட்டில்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!

பேரவையில் காவல்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில் மதுக்கடைகள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசியதாவது, கடந்த காலங்களைப் போல் இல்லாமல் கழக ஆட்சியில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலம் மதுபானப்பான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட ஒரு நிமிடம் கூட கூடுதலாக மது விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடையை அடைத்த பின்பு பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் சந்துக்கடைகள், பூட்டிய மதுபார்கள் மூலம் மதுபாட்டில் விற்பனை செய்யக் கூடாது என்று மது விற்பனையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதலாக நேரங்களில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. பூட்டப்பட்ட பிறகு மது பாட்டில்கள் விற்பனை செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.