தமிழ்நாடு

கல்லணை ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றியதற்காக தஞ்சை காவலருக்கு மத்திய அரசின் உயிர் காக்கும் காவலர் விருது..!

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயிர் காக்கும் காவலர் விருதுக்காக, தஞ்சாவூர் காவலர் ராஜ்கண்ணன் தேர்வாகியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்கண்ணன், 35. கடந்த 2010-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்த இவர், தஞ்சாவூர் ஆயுதப்படையில், 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.தற்போது, பட்டுக்கோட்டை நகர ஸ்டேஷனில், முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.கடந்த 2015-ம் ஆண்டு, கல்லணை கால்வாய் ஆற்றில் தவறி விழுந்து, சிறுவன் ஒருவன் தத்தளித்துள்ளான். ஆற்றங்கரையில் நடை பயிற்சி சென்றவர்கள், தீயணைப்பு படையினருக்கு போன் செய்து, நின்று கொண்டிருந்தனர்.

அவ்வழியே சென்ற ராஜ்கண்ணன், உடனடியாக ஆற்றில் குதித்து 500 மீட்டர் துாரம் அடித்து செல்லப்பட்டு, தண்ணீரில் தத்தளித்த சிறுவனை காப்பாற்றினார்.ராஜ்கண்ணனின் துணிச்சலான செயலை அறிந்த அப்போதைய எஸ்.பி., தர்மராஜன், கலெக்டர் சுப்பையனிடம் தெரிவித்து உள்ளார்.அவர், தமிழக அரசின் வீரதீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை செய்தார். தமிழக அரசு சார்பில், மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு, நாடு முழுதும் அறிவிக்கப்பட்ட 14 பேரில், தமிழகத்தில் இருந்து ராஜ்கண்ணன் தேர்வாகி உள்ளார்.ராஜ்கண்ணன் மனைவி சரண்யா, ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். திவான், 5; தீரன், 2, என இரண்டு மகன்கள். ராஜ்கண்ணனின் தம்பி ராஜராஜன், தஞ்சாவூர் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து ராஜ்கண்ணன் கூறுகையில், ”உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றினேன். அதனால் பணிக்கு தாமதமாக சென்றதால் விசாரித்த எஸ்.பி., என்னை பாராட்டினார். விருது பெறும் 14 பேரில் நானும் ஒருவன் என்பது பெருமையாக உள்ளது,” என்றார்.