படிப்படியாக குறையும் கொரோனா…! தமிழகத்தில் 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் , கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம், முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 17 ஆயிரத்து 321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 31 ஆயிரத்து 253 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 405 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் உயிரிழந்துள்ளனர். 3281 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 1405 பேருக்கும் செங்கல்பட்டில் 726 பேருக்கும் திருப்பூரில் 913 பேருக்கும் சேலத்தில் 957 பேருக்கும் கோவையில் 2319 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
