காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..! பரிதாபமாக பலியான 2 ஆசிரியர்கள்.!
ஜம்மு-காஷ்மீரில் திடீரென பள்ளிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா ( Eidgah) சங்கம் என்ற பகுதியில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென துப்பாக்கியுடன் அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் நிலை குலைந்த அந்த ஆசிரியர்கள், அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தனர். இதையடுத்து அவர்களை மற்ற ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த அவர்கள், அலோசிபாக் பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுவேந்தர் கவுர் (44) மற்றும் தீபக் சந்த் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர் .
