லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்று தான்..! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்…
லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவருக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.அவருக்கு சொந்தமான 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது .
இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேர்தலுக்குப் பின்னர் பொறுப்பில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மிரட்டப்படுவதாகக் கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, பணம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு முறையான கணக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
35 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதாக விளக்கமளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
