9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல்
ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திரா – தெலங்கானா இடையே தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்றது .
கூட்டத்தில் முதல்வர் ஜெகன் பேசியதாவது :
“ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் தெலங்கானா அரசு மின்சாரம் தயாரிக்கிறது. தண்ணீர் பங்கீட்டிலும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. இப்பிரச்சினை குறித்து கிருஷ்ணா நதிநீர் வாரியத்துக்கு நீங்கள் கடிதம் எழுதுங்கள். பிறகு இதுகுறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதுகிறேன்” என்றார். இதையடுத்து பல்வேறு முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் நானி, செய்தியாளர்களிடம் பேசியதாவது :
“அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் லேப்-டாப் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. விஜயநகரத்தில் பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவும் டிட்கோ சார்பில் 2.62 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு பங்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது” என்றார்.
