நடிகர் வடிவேலுவின் “கிணற்றை காணோம்” காமெடி நிஜமானது… தோண்டப்படாத கிணற்றுக்கு ரூ.4.12 லட்சம் மோசடி…
நடிகர் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற காமெடி, தற்போது நிஜமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமலேயே குடிநீர்பதிவேட்டில் கிணறு அமைக்கப்பட்டு விட்டதாக கணக்கு காட்டி 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டி, ராஜகுளம் பகுதியில், ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டிக்கு கான்கிரீட் படிகள் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்படாமலேயே குடிநீர் பதிவேட்டில் கிணறு அமைக்கப்பட்டு விட்டதாக கணக்கு காட்டப்பட்டது. இதன் மூலம், 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் மேல்நிலைத் தொட்டிகளுக்கு காண்கிரீட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக இரும்பு ஏறி அமைக்கப்பட்டுள்ளது. காண்கிரீட் படிக்கட்டுக்கும், இரும்பு ஏணிக்குமான செலவு வேறுபாடு ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்ற சிஏஜி தெரிவித்துள்ளது.
இந்த மோசடி குறித்து நத்தம் பேரூர் செயலாளர் ஒப்புக் கொண்டதாகவும், மோசடி ஒப்பந்ததாரரிடம் இருந்து 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மீதி தொகையை வசூலிப்பதற்கு முன்பாகவே அந்த ஒப்பந்ததாரர் காலமாகி விட்டதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
