தமிழ்நாடு

கொரோனா தடுப்புப்பணிக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு மாத ஊதியம் மற்றும் தனது சொந்த பணம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பன்வாரிலால் புரோகித் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் 2வது அலையில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்களும் தாராளமாக நிதியுதவி வழங்குமாறும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் மற்றும் முதலமைச்சருடனான இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், ஐஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன், ஆனந்தராவ் பாட்டீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொரோனா பாதிப்புகள் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அவர் கேட்டறிந்தார்.