ஆளுநர் மாளிகை முன் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு கண்டிக்கத்தக்கது – அமைச்சர் உதயநிதி
ஆளுநர் மாளிகை முன் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆரியமும் திராவிடமும் இல்லை என்ற ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கட்சியின் பெயரிலேயே அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? நீட் தேர்வுக்கு எதிரான போர்ட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள் மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கு தந்துவிடுகிறேன். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம். நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒன்றிய அரசுக்கு உணர்த்தும் வகையில் மாபெரும் மக்கள் இயக்கமாக அமையும் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம்.
சில கட்சிகள் IT விங் என்ற பெயரில் அவதூறுகளை தான் பரப்பி வருகின்றனர். ஆனால் நாட்டிலேயே அறிவார்ந்த IT விங்காக திமுக IT விங் செயல்படுகிறது. அரசியலுக்கு இணையாக அறிவியலிலும் ஆர்வம் காட்டும் இயக்கம் திராவிட இயக்கம். பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டு திமுகவின் கிளைச் செயலாளர்கள் கூட அஞ்சமாட்டார்கள். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக் கொள்ளாது” என்றார்.
