கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி..! அமெரிக்க நிறுவனத்தின் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..
மிழக கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து பணியமர்த்தும் திட்டத்துடன் யுனைடெட் பார்சல் சர்வீசஸ் என்ற அமெரிக்க நிறுவனம் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) திறந்து வைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் UPS போன்ற நல்ல நிறுவனங்கள் இங்கு வருவதை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதன் அடையாளமாக பார்க்கிறேன் என ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் UPS நிறுவனம் சென்னை போரூரில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய உரை வருமாறு;
உலகப் பெருமை கொண்ட நிறுவனம், இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில்நுட்ப மையத்தை திறப்பது எங்கள் ஆட்சிக்கும், எனக்கும் பெருமை தருவதாக அமைந்திருக்கிறது. எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் எப்போதும் காப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரமாகப் பல்வேறு தரவரிசைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்த நிலையைத் தக்க வைத்துகொள்ள மட்டுமல்ல, இதனை மேலும் வளர்க்க விரும்புகிறோம். பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல எங்களது அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் (TIDCO) இணைந்து மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systems) உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையமும்
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் உடன் இணைந்து, தமிழ்நாடு திறன்மிகு & மேம்பட்ட உற்பத்தி மையமும்
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி. இ. ஏவியேஷன் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.
இந்த அளவுகோலை 2034-ஆம் ஆண்டுக்குள் நாம் எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை ‘தி இந்து’ நாளிதழ் உறுதி செய்து எழுதி இருக்கிறது. இந்த நல்ல செய்தியை உங்களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியடைவதோடு, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என உங்களுக்கு அன்போடு அழைப்பு விடுக்கிறேன்.
