இந்தியா

கேரளா படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளா படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் உள்ள கடற்கரையில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இதனால் குறைவான நபர்கள் செல்ல வேண்டிய படகில் அதிகமான நபர்கள் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றுள்ளனர். அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடி தலைக்குப்புற கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய படகுக்கு துறைமுகம் மற்றும் உள்நாட்டு ஊடுருவல் உரிமம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இந்த விபத்து தொடர்பாக பேசிய பினராயி விஜயன், நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.