“ஆளுநரை யாரும் தாக்கி பேசக்கூடாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது . சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பேரவை உரையில் சில வரிகளை தவிர்த்து ஆளுநர் படித்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
நடப்பாண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் படிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்த நிலையில் ஆளுநர் சட்டப்பேரவை கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வெளியேறினார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசும் பொருளாக வலம் வந்தது . திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நாளை காங்கிரஸ் தனி தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
