TN Budget 2025 | 2025 – 26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக அரசின் 2025 – 26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக அரசின் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
எனவே புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு எட்டாவது ஊதியக் குழுவை அமைத்துள்ள நிலையில், தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதேபோல அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என இளைஞர்கள் காத்திருக்கின்றனர். பால் கொள்முதலை அதிகரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தது. உதாரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் நிதிநிலைமையை காரணம் காட்டி மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் காலி பணியிடங்கள் நிறைவேற்றப்படாததால் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு போதுமானதாக இல்லாத நிலையில், நிதி சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ்நாடு அரசு உள்ளது. குறிப்பாக புதிய கல்வி கொள்கையை ஏற்காத காரணத்தால் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதன் காரணமாக கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தற்போது பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
‘ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்’ உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம்..! என்ற வாசகத்துடன் திருவள்ளுவர் சிலையுடன் மற்றொரு தமிழ்நாடு பட்ஜெட் புகைப்படத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பு
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் 2025 பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 936 இடங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒளிபரப்புவதன் மூலம் மக்கள் உடனுக்குடன் பட்ஜெட் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு ஏற்பாடு முதல் முறை செய்யப்பட்டுள்ளது.
