கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கோயில் நிதியில் கட்ட தடை விதிக்கக் கோரி, ஏ.பி. பழனி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும்,
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டடங்கள் மூலம், மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்தது.
நவம்பர் 22ஆம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் ஆணையிட்டது. மேலும், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.
