importtax

அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா மீது வரி விதிப்பு ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க-ஜே.டி.வான்ஸ்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சி என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது மறைமுக வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு கடினமான சூழலை உருவாக்கவே, இந்த ‘பொருளாதார நெருக்கடி’ மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் என்.பி.சி. நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் உக்ரைன் போர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஜே.டி வான்ஸ் இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வான்ஸ், “ரஷ்யாவை உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்தவைக்க, டிரம்ப் ‘ஆக்ரோஷமான பொருளாதார நெம்புகோல்’ (aggressive economic leverage) முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட மறைமுக வரி விதிப்புகளும் அடங்கும்,” என்று கூறினார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ததால், அதன் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்த 3 நாட்களுக்குப் பிறகு இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்த வரி விதிப்புடன் சேர்த்து, இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது உலக அளவில் எந்தவொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்ட அதிகபட்ச வரியாகும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை, ‘நியாயமற்றது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வரிவிதிப்பு ஒரு தவறான கண்ணோட்டத்தில் எண்ணெய் விவகாரமாக சித்தரிக்கப்படுகிறது” என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாத நிலையில், இந்தியா மீது மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். “எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்குவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், அதை வாங்க வேண்டாம். யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஐரோப்பா அமெரிக்காவும் வாங்குகின்றன” என ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் புதின் உடன் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்ய முடியும் என அமெரிக்கா நம்புவதாக வான்ஸ் தெரிவித்தார். ரஷ்யா போரை நிறுத்தினால், மீண்டும் உலக பொருளாதாரத்தில் இணைக்கப்படும் என்ற செய்தியை டிரம்ப் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வரி அழுத்தங்கள், இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை பாதிக்காது என்பதை இரு நாடுகளும் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில் உறுதி செய்தன. அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுவணிகம்

டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?

பல நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் இடைநிறுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், தைவான், ஜப்பான், தென் கொரியா உள்பட ஆசிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை முதல் ஏற்றம் கண்டு வருகின்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பரஸ்பர வரியை இடைநிறுத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்போது இதை வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தச் செய்தியால் குறுகிய காலத்துக்குப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

வெள்ளை மாளிகை மறுத்த 90 நாட்கள் பரஸ்பர வரி இடைநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
பல நாட்களாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவும் பல்வேறு நாடுகள் மீது “பரஸ்பர” வர்த்தக வரிகளை விதிக்கும் தங்கள் முடிவில் முழு உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தி வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அன்று அதிபர் டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்தச் செய்தி பங்குச் சந்தையில் ஒரு சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்தனர்.

ஆனால், இப்போது சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், அந்த வரி விதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நிஜமாகிவிட்டது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதார ஒழுங்கை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க உற்பத்தித் துறையில் பொற்காலத்தைக் கொண்டு வரப் போவதாக டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேறுவது சற்றுத் தாமதமாகும்.

அமெரிக்க அரசு முதலில் அதிக இறக்குமதி வரிகளை விதித்து, பிறகு அதைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கத்தில் இருந்தே திட்டமிடப்பட்ட ஒரு செயல்தான் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, 75க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்”, என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகளாவிய வர்த்தகப் போரின் உச்ச கட்டத்தில் இருந்து டிரம்ப் பின்வாங்கியது ஏன்? பட மூலாதாரம்,EPA
வெள்ளை மாளிகையின் இத்தகைய நடவடிக்கை ஆச்சரியம் தரக்கூடியது அல்ல. மேலும் அந்த அறிவிப்புக்கு முன்பு, முதலீட்டாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளை விற்றனர், பத்திரங்களின் மதிப்பு குறைந்து சந்தை வீழ்ச்சியடைந்தது மற்றும் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்த காரணிகளை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது.

அப்படியென்றால், டிரம்பின் இந்த முடிவானது எதிர்பாராமல் நடந்த சிக்கலின் காரணமாக ஏற்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட பின்வாங்கலா? அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய பேரம் பேசும் உத்தியைப் பயன்படுத்தினாரா?

தான் எடுத்த முடிவுகளில் இருந்து டிரம்ப் ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று கூறிய அவருடைய ஆதரவாளர்கள், தற்போது இந்த இடை நிறுத்தத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, டிரம்பின் வரி விதிப்பு நிலைமை “எதிர்பார்த்தபடியே சரியாக நடந்தது” என்று கூறினார்.

“அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவரது நடவடிக்கைகள் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை அமெரிக்கா ஈர்க்கிறது” என்று செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் சில இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகள், ஏற்கெனவே அடிப்படை 10% அடிப்படை வரிகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில், இந்த வரி விலக்கு அவர்களின் நிலையை மாற்றுமா என்பதும், குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்ட வரிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இறுதியில், வெள்ளை மாளிகை இந்தக் கேள்விகளுக்கு சில தெளிவை வழங்கியது. ஆனால் பல மணிநேரம் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள் டிரம்பின் இந்த சமூக ஊடக பதிவைக் கூர்ந்து கவனித்தன. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் வைத்து விவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதன்கிழமை மதியம், டிரம்ப் பங்குச் சந்தை மோசமாக இருந்ததையும், முதலீட்டாளர்கள் கவலை அடைந்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் இதற்கு முன்பு பங்குச் சந்தை குறித்துப் பெருமையாகப் பேசியதற்கு இது எதிராக இருந்தது. மேலும் வரி விதிப்பு குறித்த மாற்றத்திற்கான காரணத்தையும் இது வெளிப்படுத்தியது.

புதன்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் மக்களை “அமைதியாக இருங்கள்” என அறிவுறுத்தியதோடு, “எல்லாமே சரியாக முடியும்” என்றும் உறுதியளித்தார்.

திங்கட்கிழமை, அவர் “பயந்தவர்கள்” என்று அழைத்த ஒரு குழுவைக் கடுமையாக விமர்சித்தார். தனது முயற்சிகளுக்குப் பொறுமையாக இருக்க முடியாத பலவீனமான மற்றும் முட்டாள்தனமான மக்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

ஆனால், இப்போது டிரம்பே தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இருப்பினும், இந்த வரி அறிவிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்றும், எந்தவொரு பொருளாதார சீர்குலைவுகளும் அமெரிக்க பொருளாதாரத்தில் பரவ அனுமதிக்கப்பட்ட ஒரு நோயைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் நிலைமையை அவ்வளவு நம்பிக்கையானதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், “டிரம்ப் குழப்பத்தில் ஆட்சி செய்வதாகவும்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறுபான்மையினருக்கான தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார்.

“அவர் தளர்ந்திருக்கிறார், பின்னடைவைச் சந்திக்கிறார், அது நல்ல விஷயம்,” என்றும் அவர் கூறினார்.
இறுதியில், டிரம்பின் முடிவுக்குப் பின்னால் உள்ள சிந்தனை உண்மையில் முக்கியமற்றதாக இருக்கலாம்.

உண்மையில், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா முயன்று வருகிறது. தற்போதும், 10% வரியை டிரம்ப் தொடர்கிறார். இது சில வாரங்களுக்கு முன் நடந்திருந்தால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இது பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. மேலும், சீனாவுடன் வர்த்தகப் போரில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அவர் சீன இறக்குமதிகளுக்கு 125% வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இது ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை உள்பட அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் இதன் மூலம் சீனாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

இருப்பினும் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள், அமெரிக்காவின் கூட்டாளிகளை நெருக்கடியில் தள்ளியது. இது உலக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இப்படியான ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பதை இது மேலும் கடினமாக்கியுள்ளது.

மேலும் 90 நாட்களில், டிரம்பின் இடைக்கால வரி விதிப்பு முடிவுக்கு வரும்போது, தற்போது உள்ளதைப் போன்ற பொருளாதாரச் சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை மீண்டும் தொடங்கலாம்.
பரஸ்பர வர்த்தக வரிகள் மீதான அதிபர் டிரம்பின் வியக்கத்தக்க மாற்றத்திற்குப் பிறகு, ஆசிய-பசிபிக் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன.

அதிபர் டிரம்பின் இந்தத் தற்காலிகியமாக வரி விதிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கை, ஆசிய பங்குச் சந்தைக்கான ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது. அவை “நெருக்கடியில் இருந்து நெகிழ்ச்சியான சூழலுக்கு மாறியுள்ளன” என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மீது டிரம்ப் அதிக வரிகள் விதிப்பதை நிறுத்தி, சீனா மீதான வரிகளை உயர்த்தியதை அடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 9) வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.

இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் “மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்” என்று எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீனா மீது 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டு நிலைமை மாறினால் அதுவும் சமாளிக்கக்கூடியதாக மாற வாய்ப்புள்ளது” என்றார்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள்- டிரம்பின் பரஸ்பர வரி

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More