மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான என்.டி.ஏ 3.0 அரசாங்கத்தின் 3-வது முழுமையான பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 2026 பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் தாக்கலின் மூலம், மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முன்னாள் நிதியமைச்சர்களை விட அதிக எண்ணிக்கையிலான மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். இந்த அறிவிப்புகள் வரும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை மத்திய பட்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (indiabudget.gov.in), சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பல தேசிய செய்தி சேனல்களும் நேரலை ஒளிபரப்பை வழங்கும், அதே நேரத்தில் சன்சாத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆகியவை தங்களது யூடியூப் தளங்களில் நேரலை செய்வதோடு சமூக வலைதளங்களிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கும்.
இவை தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் (indianexpress.com) இணையதளத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் பகுப்பாய்வு குறித்த நேரடித் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
புதிய வரி முறையின்கீழ் ரூ. 12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட 2025-26 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பைத் தொடர்ந்து, வரி செலுத்துவோரிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மேலும் வருமான வரி சலுகைகள், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான இலக்கு பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட்டிற்கு முன்னதாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25-ல் இருந்த 6.5 சதவீதத்தை விட அதிகமாகும். இருப்பினும், பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படாத பெயரளவு ஜி.டி.பி வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2026-27 பட்ஜெட்டில் வரி வருவாயை மதிப்பிடுவதற்கான முக்கிய காரணியாகும்.
கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் பெறப்படும் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறனுக்கான ஒரு மிஷன் மற்றும் அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய மிஷனை அமைத்தல் ஆகியவை அடங்கும். மேம்படுத்தப்பட்ட கே.சி.சி கடனை அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகிறது என்றும், அதிக கடன் வரம்பு நிறுவனக் கடன்களைப் பெறுவதை மேம்படுத்தும் என்றும் சீதாராமன் கூறியிருந்தார்.
Read More