இந்தியா

கேரள கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம், கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. அங்கு மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 2 தினங்களில் மழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழைக்கு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 6 தாலுகாக்களில், 63 முகாம்கள் அமைக்கப்பட்டு 515 குடும்பத்தினர் 1840 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 26 வீடுகள் முழுமையாகவும், 304 வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோராப்பட்டுள்ளது.