தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாளை அதாவது பிப்ரவரி 17 காலை 10 மணி முதல் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியதாவது.:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நேரத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தலை நேர்மையாக நடத்த உதவி புரியும் வகையிலும் நாளை முத்ல தொடர்ந்து 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி நாளை பிப்ரவரி 17 காலை 10 மணி முதல் பிப்ரவரி 19 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் சென்னையில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சி பகுதிகளில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 7,621 வார்டுகளிலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
