கேரளா கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டமானது..! உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…
அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால். கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. அங்கு மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கேரள நிலவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டமானது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த 2 தினங்களில் மழை மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழைக்கு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
