இரண்டாம் பத்தியில் வெற்றிக்கணக்கை தொடங்கிய சி.எஸ்.கே..! மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாச வெற்றி.
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. துபாயில் நேற்றிரவு நடந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.
ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . டு பிளெஸ்ஸி, போல்ட் வேகத்தில் மில்னியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து வந்த மொயீன் அலியும் டக் அவுட்டாகி அப்சட் செய்தற் . இதனால் சிஎஸ்கே 1.3 ஓவரில் 2 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சியில் இருந்தது.
அம்பத்தி ராயுடு காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, சிஎஸ்கே-வுக்கு சிக்கல் அதிகரித்தது. அடுத்து வந்த ரெய்னா 4 ரன், தோனி 3 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் சென்னை அணி 6 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ருதுராஜ் – ஜடேஜா ஜோடி பொறுப்புடன் ஆடியது.
அபாரமாக விளையாடிய ருதுராஜ் அரை சதம் அடித்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்னில் பும்ரா வேகத்தில் பொல்லார்டிடம் பிடிபட்டார். அடுத்து வந்த பிராவோ அதிரடியில் இறங்க, சிஎஸ்கே ஸ்கோர் ஏறியது. போல்ட் வீசிய 19வது ஓவரில் மட்டும் 24 ரன் கிடைத்தது.
பிராவோ 23 ரன் (8 பந்து, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை ருதுராஜ் சிக்சருக்கு தூக்கி அருமையா நிறைவு செய்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. ருதுராஜ் 88 ரன் (58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஷர்துல் தாகூர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா களமிறங்காததால் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். குயிண்டான் டி காக் மற்றும் அன்மோல்பிரித் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ரன் சேர்த்த டி காக் 17 ரன்களிலும், அன்மோல்பிரித் சிங் 16 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 3, இஷன் கிஷன் 11 , பொல்லார்டு 15 , குருணால் பாண்ட்யா 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, சென்னை நாய்க்கு சாதகமாகியது போட்டி.
கடைசி ஒவரில் வெற்றிபெற 23 தேவைப்பட்ட நிலையில் மில்னி 15 ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் சவுரவ் திவாரி 50 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது ருதுராஜுக்கு வழங்கப்பட்டது.
