தமிழ்நாடு

திக்குமுக்காடும் நடுத்தர மக்கள்..! மீண்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு..!

நாடு முழுவதும் படிப்படியாக உயர்ந்துவந்த பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று சற்று குறைந்துள்ள நிலையில், அடுத்த ஆபத்து நடுத்தர மக்களை சூழ்ந்துள்ளது வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் ரூ. 25 அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் வீட்டு உபயோக சிலிண்டர் எரிவாயு விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 அதிகரித்து 1831.50க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.